Wednesday, July 23, 2008

வேலம்பட்டி விஞ்ஞானி.-(சமூக) அறிவியல் கதை

இந்திய தொழில் நுட்பக் கழகம், சென்னை வளாகம் . அந்த உள் அரங்கில் அன்று விதவிதமான முகங்கள் தென்பட்டன.

வரிசையாக பொருட்காட்சி போன்று , பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது.. ஒவ்வொரு பந்தலிலும் , கொரியா, ஜப்பான், அமெரிக்கா என்று பேனர் எழுதப் பட்டிருந்தது.

அங்கே , ஒவ்வோரு பந்தலிலும் , ஒரு மேடையும், அதனுள் மாணவ மாணவர் , குட்டி ரோபோ போன்ற இயந்திரங்கள், எலெக்ட்ரானிக் இயந்திரங்கள், கன்னா பின்னாவென்று ஒயர்கள், ஸர்க்யூட் போர்ட்கள் சகிதம் , புரியாத வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள்..ஒரு மடிக்கணினி மூலம், யாருக்கோ , எதையோ, புரிய வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதைக் கேட்டவர்கள் புரிந்த மாதிரி தலையாட்டிக் கொண்டிருந்தார்கள்.


என்ன நடக்கிறது வாங்க.. யாரிடமாவது கேட்கலாம். அதோ டை அணிந்து, வழுக்கையாக , , கண்ணாடி அணிந்து, ஒரு பேராசிரியர் போல இருக்கிறாரே, அவரிடம் கேட்கலாம்..

“ஐயா , இங்கே நடப்பது என்ன”

“இங்கே, ஜப்பான் நாட்டு உதவியுடன் நடத்தப்படும் “இளம் விஞ்ஞானிகளைக் கண்டறிதல் போட்டி” யின் இறுதிச் சுற்று நடைபெறுகிறது..
போட்டிக்கான தீம், “ சயன்ஸ் ஃபார் ப்ரஸண்ட் ஹுமானிட்டி” அதாவது தற்போதைய மனித குலத்திற்கான அறிவியல்..”, நமது, உலகில், இன்றைய தினம் மனித குலத்திற்கு சவாலாக விளங்கும் ஏதேனும் பிரச்சினைகளுக்கான தீர்வு, இந்த மாணவர்களிடம் உள்ளதா என்பதை கண்டுபிடித்து அவர்களை ஊக்குவிப்பது இந்த்ப் போட்டியின் நோக்கம்..”

”அது சரி ஐயா, அந்த மாதிரி விசயங்களுக்குத் தான், பல்கலைக் கழகங்கள், பல கோடி செலவழித்து , பி ஹெச் டி ஆராய்ச்சிகள் நடத்துகின்றனவே.. அதில் வராத முடிவுகளா, தீர்வுகளா ?”



”முதலில் நான் என்னை அறிமுகம் செய்து கொள்கிறேன். நான் இந்தப் போட்டிக்கான் நடுவர் குழுவில் ஒருவன் . சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழத்தில் பேராசிரியராக பணிபுரிகிறேன்.. ( நமது ஊகம் சரி தான்) .என் பெயர் நடராசன்.
தற்போது, பல பல்கலைக் கழகங்களில் நடத்தப் படும் பல ஆய்வுகள், எப்பாடியாவது , முனைவர் பட்டத்தை பெற்றுவிடவேண்டும் என்பதற்காக , மொக்கையான தலைப்புகளில் ( அது, சரி, தமிழ்ப் பதிவு அதிகம் படிப்பார் போல !!) நடை பெறுகிறது.
எடுத்துக் காட்டாக சிலவற்றைக் கூறுகிறேன்..'ஹவ் ஸ்பெரிக்கல் வாட்டர் ட்ராப்லெட்ஸ் , பிஹேவ் ஆன் எ கோனிகல் சர்ஃபேஸ் இன் நியர் அப்சொல்யூட் வேக்வம், இன் ஸ்பேஸ்”. என் கீழே ஆராய்ச்சி செய்யும் ஒரு மாணவன் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த தலைப்பு உங்களுக்குப் புரியவில்லை என்றால் அது உங்கள் தவறு அல்ல. இதற்கு கைடாக இருக்கும் எனக்கே புரியவில்லை..
அங்கே மட்டும் அல்ல..இங்கேயும் ,சில உதாரணங்கள் கூறுகிறேன்..”சங்க இலக்கியங்களில் , தலைவியின் பசலை நோய்கள்” என்ற தலைப்பில் ஆறு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, முனைவர் பட்டம் வாங்குகிறார்கள்.. இதை விட , தொடக்கப் பள்ளியில் ஆனா ஆவன்னா சொல்லிக் கொடுக்கும் வாத்தியார், ஒரு சமுதாயத்தின் பார்வையில் மேலான தொண்டு செய்கிறார் என என்னால் சொல்ல முடியும்..”

”இங்கே நடப்பது, எப்படி வித்தியாசமானது எனக் கூறுகிறீர்கள்.?”

”இங்கே , நடை பெற்றுக் கொண்டிருக்கும் இந்தப் போட்டி, அதற்கு விதி விலக்கானது..படிப்பு, வயது, என தகுதி நிர்ணயம் செய்யாமல், எல்லோருக்கும் பொதுவான போட்டி இது. கண்டுபிடிப்புகளின் உபயோகத்தையும், எத்துணை எளிதாக அதை உருவாக்கலாம் என்பதைப் பொறுத்தும் மட்டுமே, வெற்றி பெறுபவர் தீர்மானிக்கப் படுகிறார்..
இதோ , இந்த பந்தலில் அமர்ந்திருக்கும் மாணவர்கள், பல சுற்றுக்களைக் கடந்து தற்போது, இறுதிப் போட்டியில் அமர்ந்திருப்பவர்கள்.
இங்கே , சற்றும் எதிர்பாராத விசயம், இங்கே, இந்தியா, சார்பில் இறுதிப் போட்டியில் வந்திருக்கும் மாணவன், ஐ ஐ டி யோ, பி ஹெச் டி யோ அல்ல.. வேலம் பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பதினோராம் வகுப்பு மாணவன்..அவன் போன சுற்றுக்களில் காட்டிய கருவிகள், தற்போதைய இந்தியாவிற்கு மிகவும் அவசியமானவை..”
அவன் கண்டிபிடித்த சாதனங்களில் ஒன்று , செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி ரயில்வே, கேட் . ரயிலில் பொருத்தப்பட்டிருக்கும் செல்போன் மூலம் சமிஞ்ஞை கிடைக்கப் பெற்று, தன்னால் கேட் மூட வைக்கும் ஒரு சாதனம்,.அது மட்டும் அல்ல, இரு ரயில்கள் ஒரே தடத்தில் வரும் போதும், இரு ரயில்களையும் நிறுத்தி விடும்.
இதற்காகிய செலவு வெறும் ஆயிரம் மட்டுமே..இந்தச் சாதனம் நடைமுறைப் படுத்தப் பட்டால் வருடத்திற்கு ஐயாயிரம் மரணங்கள் இந்தியாவில் தடுக்கப் படும். சென்ற வருடம் , சென்னை அருகே, ஷேர் ஆட்டோ ஒன்று தண்டவாளத்தைக் கடக்க முயலுகையில், அடிபட்டு, நூறு மீட்டர் தூரம் வரை இழுக்கப்பட்டு இருபத்தைந்து பேர், கூழானது ஞாபகம் இருக்கிறதா,.இது நாடெங்கிலும் நடக்கும் நூற்றுக்கணக்கான நிகழ்வுகளில் ஒரே ஒரு உதாரணம் தான் “

அந்த மாணவனைச் சந்தித்து உடனே பாராட்ட வேண்டும் எனத் தோன்றுகிறதல்லவா..வாங்க போய் பேசுவோம்..அதோ கடைசிப் பந்தலில், இந்தியா என எழுதப் பட்டுள்ளது..
அவன் நீல வண்ண கால் சட்டையும், வெள்ளை சட்டையுமாக பள்ளி சீருடையில் இருந்தான்..

காலில் ரப்பர் செருப்பு அணிந்திருந்தான்....லேப்டாப்போ வேறு மின்னணு கருவிகளோ இல்லை.

”வணக்கம், உங்களைப் பற்றியும் நீங்கள் இறுதிச் சுற்றுக்கு கண்டுபிடித்த சாதனத்தைப் பற்றியும் கூற முடியுமா ?”


”என் பெயர் குருசாமி சார்.. நான் வேலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கிறேன். சார்..இந்த இறுதி போட்டிக்காக, மக்காத பதின்ம பொருட்களை, எப்படி, உபயோகமுள்ள மக்கும் , பொருட்களாக மாற்றுவது என்று கண்டுபிடித்துள்ளேன்..”

“அருமை...அதாவது , நான்-பயோ டீக்ரேடபள் பாலிமர் மற்றும் ப்ளாஸ்டிக் பொருட்களை, எப்படி , பயோடீக்ரடபிள் ஆக மாற்றுவது..சரியா .?”

“சார், நான் தமிழ் மீடியம் சார்.. நீங்கள் சொல்வது எனக்கு சரியாக புரியவில்லை..ஆனால் அது தான் என நினைக்கிறேன்..”

“உங்கள் சாதனம் எங்கே?”

”இல்ல சார். இப்போதைக்கு ஐடியா மட்டும் தான் இருக்கு..அந்த சாதனத்தை உருவாக்கும் அளவிற்கு பணம் இல்லாததனால் , உருவாக்கவில்லை..”

”வெறும் ஐடியாவை ,போட்டிக்கு ஏற்க மாட்டார்களே , தம்பி”

“எனக்கு வேற வழியில்ல சார். இதற்கு முன் சுற்றுக்களில் நான் கண்டுபிடித்தவை அனைத்து, குறைந்த செலவில், அதுவும் என் தலைமை ஆசிரியர் கொடுத்து உதவிய பணத்தில் செய்தது சார். ”

“நீங்கள் அரசாங்கத்திடம் உங்கள் கண்டுபிடிப்பைக் பற்றிக் கூறி, மானியம் கேட்டிருக்கலாமே” , சிங்கப்பூர் பேராசிரியர் கேட்டார். பாவம் , அவருக்கு, இங்குள்ள நிலைமை தெரியாது போல..

”கேட்டேன் சார், கலெக்டர் ஆபிஸ்ல போய் கேட்டேன்.. அவங்க, ஏற்கனவே, ராமர் பிள்ளைன்னு ஒருத்தன், ஒரே நேரத்தில சந்திரபாபு நாயுடு வரை, எல்லாத்தையும் வரிசையில நிக்க வச்சு காது குத்தினது போதாதா , அடுத்து நீ வேறயா “ ன்னு கேட்டாங்க சார்..”

”உங்கள் ஆசிரியரை, அல்லது அல்லது வேறு யாராவது, விஷயம் தெரிந்தவரை அழைத்துக் கொண்டு, அமைச்சரை பார்த்திருக்கலாமே !”

”நானும் என் தலைமை ஆசிரியரும் போனோம் சார் கல்வி அமைச்சரைப் பார்க்க .ஆனா, அமைச்சர் ,“நீங்க என்ன நாலு கோடி, அஞ்சு கோடி ன்னு, குறைந்த செலவுல , படம் எடுக்கும் தயாரிப்பாளரா , அதுக்குத்தான், இப்போ, மானியம் கொடுப்போம்..இதுக்கெல்லாம் , தர முடியாது ”ன்னு சொல்லிட்டார் சார்.”

”சரி , உங்கள் கண்டுபிடிப்பை கொஞ்சம் விளக்குங்கள்..”

அவன் சொல்ல சொல்ல பேராசிரியரும் மற்ற நடுவர்களும் கவனமாக கேட்டார்கள்..

முடிவில்., அந்த வருடத்துக்கான் இளம் விஞ்ஞானிகள் பெயர்கள் அறிவிக்க்கப்பட்டன

அதில் குருசாமியின் பெயர், இல்லை...

போட்டி முடிந்து, அவரவர் நாட்டுக்கு , ஊருக்கு சென்றுவிட்டனர்..

சிறிது நாட்கள் கழித்து, வேலம்பட்டி, பள்ளி தலைமை ஆசிரியருக்கு கடிதம் ஒன்று வந்திருந்தது...ஆங்கிலத்தில் இருந்த அக்கடிதம்,தமிழில்.


“இது உங்கள் பள்ளி மாணவர் குருசாமி என்பவர் இறுதிச் சுற்றுக்க்காக , கண்டுபிடித்த ஒரு கருத்தைப் பற்றியது. அவர் சொல்லிய கருத்துப் படி, ஒரு சாதனைத்தை, நாங்கள் இங்கே செய்து பார்த்தோம்.., இது தற்போது, உலகையே ஆட்டிப் படைக்கும் வினாவிற்கு விடையாக அமைந்துள்ளது, என நீருபணம் ஆனதை பெரு மகிழ்வுடன் கூறிக்கொள்கிறோம். ஆண்டுக்கு லட்சக்கணக்கான் டன் கணக்கில் ப்ளாஸ்டிக் குப்பைகள் இந்தப் பூமியில் கொட்டப்படுகின்றன. இதனால் ஏற்படும் , சுற்றுச்சூழல் கேடு, நம் எதிர்கால சந்ததியின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
விலங்குகளின் கழிவுகளில் இருந்து எடுக்கப் படும் ஒரு வகையான பாக்டீரியாவை வைத்து, பாலிமர் மூலக்கூறுகளை உடைத்து, மறுபடியும், அதை, அடிப்படை சேர்மங்களாக மாற்ற முடியும் என காண்பித்த கருத்து, தற்கால நோபல் பரிசு பெறும் கண்டுபிடிப்புகளுக்கு சற்றும் குறைந்தது அல்ல..இதற்காக, எங்கள் அரசாங்கம், அந்த மாணவனுக்கு பத்து மில்லியன் யென் பரிசாக வழங்குகிறது..இந்த மாணவனின் எதிர்கால ஆராய்ச்சிக்கான அத்தனை உதவிகளையும் , எங்கள் நிறுவனம் தரத் தயாராக உள்ளது .அந்த மாணவரை, எங்கள் நாட்டுக்கு அழைத்து , பாராட்டு விழா நடத்த இருக்கிறோம்.”


அதற்கு அடுத்த நாள் எல்லா பத்திரிக்கைகளிலும், கல்வி அமைச்சர், சிரித்தவாறே, குருசாமியைக் கட்டிப் பிடித்து, அவனுக்கு மானியம் அளித்த படம் வெளியானது..




மறுப்புக் குறிப்பு:

இக்கதையில் வரும் குருசாமி, பாலிமர், பயோடீக்ரேடபள், மான்யம் , உள்பட அனைத்தும், முழுக்க முழுக்க, தசாவதாரம் கயாஸ் தியரி அளவுக்கு கற்பனையே.